.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday 17 September 2016

எம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப்பட்டது?

எம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப்பட்டது?

- கோ. பாண்டியன், போலீஸ் உதவி கமிஷனர் (பணி நிறைவு), செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும், தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான உறவு, தற்போது பதற்றமாக காணப்படுகிறது.

இப்போதைய முதல்வர்களுக்கு, கடந்தகால, சில நிகழ்வுகளை குறிப்பிட்டே தீர வேண்டும்...

தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரும், அப்போதைய தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக, டில்லியில் இருந்த, க. ராஜாராமும் ஒருமுறை, முன் அறிவிப்பு ஏதும் இன்றி பெங்களூரு சென்றனர்.

அப்போது, கர்நாடகாவில் முதல்வராக இருந்த குண்டுராவ் வீட்டிற்கு, எம்.ஜி. ஆர்., சென்றார். குண்டுராவின் தாயார் வீட்டில் இருந்தார். தலைமை செயலகத்தில் இருந்த, குண்டுராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறி அடித்து வீடு வந்த குண்டுராவ், எம்.ஜி. ஆரை கட்டி தழுவி வரவேற்றார். 

பின், அவருக்கு, குண்டு ராவ் விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். பிரம்மாண்டமான மேஜையில் உணவுகள் பரிமாற தயாராகின. டம்ளரில் இருந்த குடிநீரை, குண்டுராவின் தாயார் எடுத்து, எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.

வாங்க மறுத்த அவர், 'என் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது; குடிக்க, பாசனத்திற்கு தண்ணீர் இன்றி என் மக்கள் சிரமப்படுகின்றனர். நான் மட்டும் விருந்து சாப்பிடவா' என, கூறினார். எம். ஜி.ஆரின் ஆதங்கத்தை புரிந்து கொண்ட குண்டுராவ், காவிரி தண்ணீரை உடனே திறந்து விட ஏற்பாடு செய்தார்.

ஒருமுறை கர்நாடகாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவியது. இதுபற்றி. எம்.ஜி.ஆரிடம் கூறப்பட்டது. உடனே, தமிழகத்தில் இருந்து, கர்நாடகாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கப்பட்டது.

இரு மாநில அரசுகளும், தங்களின் பிரச்னை, தேவைகளை புரிந்து நடந்து கொண்டன. இப்போது, இரு மாநில முதல்வர்களும்  கவுரவம் பார்க்காமல்,நேரடியாக சந்தித்து பிரச்சனைகளை பேச வேண்டும். அதன் மூலம், இரு மாநில மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஒற்றுமைக்கும் வழி வகுக்கலாம்!

-வாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த 'என்கவுண்டர்'.. !

சென்னை:

 கன்னட சளுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜை நேரில் சந்தித்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியதாக கூறி கிஷோர் கே சாமியின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு காணப்படுகிறது.

அது இதுதான்:

கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக் கூடாது என்று வாட்டள் நாகராஜ் தலைமையிலான கும்பல் போஸ்டர்களை கிழிப்பதும் , திரையரங்குகள் முன்னர் மறியல் செய்வதும் என்று செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், அதை மக்கள் திலகம் எப்படி எதிர்கொண்டார் என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு ....

இது குறித்து தகவல் அறிந்ததும், மக்கள் திலகம் நேரே பெங்களூருக்கு புறப்பட்டார் , அந்த வாட்டாள் நாகராஜ் ஒரு முரடர் , அவரிடம் நீங்கள் சென்று பேச வேண்டுமா என்று சிலர் தடுத்த பொழுதும். 'நான் பேசப் போகிறேன், வாதிக்கப் போவதில்லை. அவர் மனிதர் தான், ஒரு இயக்கத்தவர் தான்' என்று வாட்டாள் நாகராஜின் அலுவலகத்திருள் சென்று விட்டார் .

வாட்டள் நாகராஜ், திமிருடன் அமர்ந்தப்படியே, மக்கள் திலகத்தை அமரச் சொல்லி விட்டு , 'என்னை பார்க்க வந்ததன் நோக்கம் என்ன ? என்று கேட்க ...
மக்கள் திலகம் ' தமிழ் படங்களை ஓட விடக் கூடாதுன்னு நீங்க சொல்றீங்களாம் , அதுக்கு என்ன காரணம் ? யாரும் சரியா சொல்லலை , அதான் உங்க
வாயாலேயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் ... '' என்றார் .

வாட்டள் நாகராஜ் சற்று யோசித்து பின்னர் , 'எங்க கன்னட படத்தை நாங்க எப்படி எடுத்தாலும் ஓடுறதில்லை, உங்க தமிழ் படங்கள் ஓடுது அதுக்குத் தான் வசூல். அதனால் தான் என்றார். 'சந்தோசம் , எந்த ஒரு காரியத்துக்கும் அடிப்படையை யோசிக்கணும், நீங்க தமிழ் படத்தை தடுத்தாலும் பாதிப்பு கன்னட காரர்களுக்குத் தான் என்று மக்கள் திலகம் சொல்ல .... வாட்டள் முகம் சுளித்தபடி ' புரியலே ...' என்று சொல்ல ... மக்கள் திலகம் தொடர்ந்தார் : ' கொஞ்சம் பொறுமையா கேட்கணும், நாங்க எடுக்கறது தமிழ் படமானாலும் , அதில் பணிபுரியுற பெரும்பாலானவர்கள் உங்க நாட்டுக்காரங்க தான்'

ஆரம்ப கால டைரக்டர், 300 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் எடுத்தவர் சுந்தராவ் நட்கர்னி. அவர் கொங்கனியர். உங்க மாநிலத்தவர்.

பெரிய படங்கள் எடுத்த பந்துலு யார் தெரியுமா? அவங்க மனைவி எம்.வி.ராஜம்மா யார் தெரியுமா ? உங்க நாட்டவங்க .

அங்கேயுள்ள ஸ்டூடியோ ஓனர் விக்ரம் யார்? அவர் உங்க நாட்டவர் . அவர் என்னையும் வைத்து படம் எடுத்தார் ... படம் - பட்டிக்காட்டு பொன்னையா .
என்னோடு நடித்த சரோஜா தேவி யார்? எல்லாரும் உங்க நாட்டு செல்வங்கள்.

உங்க நாட்டு மிகப் பெரிய ஹீரோ ராஜ்குமார் யார்? பூர்வீகம் திருச்சியாம். அவருடைய முதல் படமே எங்க நாட்டுக் காரர் தான் எடுத்தார் .... படம் ' வேடன் கண்ணப்பா ' ... அவருக்கு அங்கே பெரிய வீடு இருக்கு . நான் சொன்ன எல்லோருக்கும் அங்கே பெரிய பெரிய வீடு இருக்கு.

உங்க நாடு பெத்தது, இது தாய் நாடு ... எங்க நாடு வளர்த்தது , அது செவிலித் தாய் நாடு. பெத்த தாயை விட வளர்த்தவளுக்கும் மரியாதை கொடுக்கணும் இல்லையா?

எங்க நாட்டுக்காரங்களுக்கு இங்க வீடு இருக்கா? வாசல் இருக்கா? ஒருத்தர் இங்கே இருக்கிறார், அவராலும் உங்களுக்கு பெரிய வருமானம். சுவாமி ராகவேந்திரர் . புவனகிரியில் பிறந்தவர் .

தூத்துக்குடியில் தான் சங்கு விளையுது, அதில் தான் உங்க நாட்டு பிள்ளைங்களுக்கு பால் வார்ப்பாங்க. உங்க காட்டுல தான் சந்தனம் விளையுது, அதில் தான் எங்க நாட்டு தலைவர்களை தகனம் செய்வாங்க ....

இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றுபடுது. இதுக்கு மேலையும் நீங்க தமிழ் படத்தை எதிர்க்க விரும்பினா. என் படங்களை கன்னட ஏரியாக்களுக்கு விற்க வேண்டாம்னு சொல்லிடறேன். அந்த நஷ்டத்தை புரடியூசர்களுக்கு என் சம்பளத்திலிருந்து கொடுத்து விடுகிறேன். பிலிம் சேம்பரிலும் சொல்லி கர்நாடகாவுக்கு விற்க வேண்டாம்னு கேட்டுக்கறேன் என்றார் மக்கள் திலகம் ......

அந்தக் கணமே தம்மையும் அறியாமல் இருக்கையிலிருந்து எழுந்த வாட்டாள் நாகராஜ், மக்கள் திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு 'இனிமே உங்க படத்துக்கு நானே பாணர் கட்டறேன் , போஸ்டரும் ஓட்டறேன் ' என்றார் .....அது தான் மக்கள் திலகம்

விவரிப்பு: எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் .

No comments:

Post a Comment